சமூக ஊடகத்திலிருந்து விலகிய இன்னொரு பிரபலம்: இன்ஸ்டாகிராமில் பகிர்வு

சமீப காலமாக பல்வேறு பிரபலங்கள் தங்களின் சமூக ஊடக கணக்கை முடக்கிவிட்டு வெளியேறி வருகிறார்கள். அந்த வரிசையில் பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கர், சமூக ஊடகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

'சிம்பா', 'குயின்', 'பார் பார் தேகோ' உள்ளிட்ட பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடியிருப்பவர் நேஹா கக்கர். சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்கி வரும் இவர் தற்போது அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நேஹா, "மீண்டும் உறக்கத்துக்குச் செல்கிறேன். உலகம் நல்லபடியாக மாறிய பிறகு என்னை எழுப்புங்கள். சுதந்திரம், அன்பு, மரியாதை, அக்கறை, மகிழ்ச்சி, ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, நல்ல மக்கள் இருக்கும் உலகம். வெறுப்பு, வாரிசு அரசியல், பொறாமை, முன் தீர்மானங்கள், ஆதிக்க மனப்பான்மை உடையவர்கள், ஹிட்லர்கள், கொலைகாரர்கள், தற்கொலைகள், தீயவர்கள் இருக்கும் உலகமல்ல. கவலை வேண்டாம். நான் சாகவில்லை. சில நாட்கள் விலகியிருக்கப் போகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பல நெட்டிசன்கள் வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முன் வைத்த காரணத்துக்காக நடிகை சோனாக்‌ஷி சின்ஹா சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். நடிகை சோனம் கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து மோசமான கருத்துகளைச் சிலர் பதிவிடுவதால், கருத்துப் பதிவிடும் வசதியை முடக்கி வைத்துள்ளார். நடிகர் சகீப் சலீமும், ட்விட்டரில் வெறுப்புணர்வு அதிகமாகிவிட்டதால் வெளியேறுகிறேன் என்று அறிவித்து தனது கணக்கை முடக்கியது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE