தூய்மையான கடின உழைப்பின் பலன்: எடை குறைப்பு பற்றி நடிகை வித்யுலேகா பதிவு

தனது உடல் பருமன் பற்றியும், தான் உடல் எடையைக் குறைத்த அனுபவம் குறித்தும் நடிகை வித்யுலேகா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிய வித்யுலேகா, நடிகர் மோகன்ராமின் மகள். 'ஜில்லா', 'வீரம்', 'வேதாளம்', 'பவர் பாண்டி' உள்ளிட்ட பட படங்களில் வித்யுலேகா நடித்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களாக அதிகமாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் வித்யுலேகா, தான் உடல் எடை குறைத்த அனுபவம் குறித்து தனது அன்றைய, இன்றைய புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் வித்யுலேகா கூறியிருப்பதாவது:

"போலி தன்னம்பிக்கை - உண்மையான தன்னம்பிக்கை.

நான் அதிக பருமனாக இருந்த போது பலரும் என்னிடம் கேட்ட கேள்வி, 'எப்படி இவ்வளவு தன்னம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?' என்பதே. யோசித்துப் பார்த்தால், நான் தன்னம்பிக்கையுடன் இருந்தேனா? அல்லது என் வாழ்க்கை முழுக்க நான் இப்படித்தான் பருமனாக இருக்கப்போகிறேன் என்று ஏற்றுக்கொண்டுவிட்டிருந்தேனா?

இன்று நான் நிஜமாகவே தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் நான் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயத்தைச் செய்தேன். என் வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை மாற்றினேன். ஒரு விஷயத்தில் உங்கள் சிந்தனையை முழுமையாக வைத்தால் எதுவும் சாத்தியம். வழக்கமாகக் கேட்கும் விஷயம் போல இருக்கிறது இல்லையா? ஆனால் இதுதான் உண்மை.

ஒழுக்கமாக இருக்க வேண்டும், வாரத்துக்கு 6 முறை உடற்பயிற்சி, சரியான சாப்பாடு இருக்க வேண்டும். பலன் கிடைக்க எந்த ரகசிய மருந்தும் மாத்திரையும் கிடையாது. தூய்மையான கடின உழைப்பு மட்டுமே. வாழ்க்கையில் எதுவுமே எளிதாகக் கிடைத்திடாது. ஆனால் பலனைப் பார்க்கும் போது, நாம் சிந்திய வியர்வை, கண்ணீர் எல்லாவற்றுக்கும் மதிப்பு உள்ளது என்பது புரியும்"

இவ்வாறு வித்யுலேகா தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE