வாரிசு அரசியல் சர்ச்சை எதிரொலி: கான் நடிகர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரச்சாரம்

By ஐஏஎன்எஸ்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்துள்ளனர். ஆலியா பட், சோனம் கபூர், சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட பலரையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கான் நடிகர்களுக்கு எதிராக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #BoycottKhans என்ற ஹாஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் என்பது கான் நடிகர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்று பலரும் அந்த ஹாஷ்டேகுகளை பயன்படுத்தி விமர்சித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE