இப்படி ஒருவர் உருவாகவே முடியாது: விஜய்க்கு மாளவிகா மோகனன் வாழ்த்து

By செய்திப்பிரிவு

ஆர்வம் கொண்டவர், உற்சாகமானவர் என்று விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் விஜய். இன்று (ஜூன் 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். கரோனா அச்சுறுத்தலால் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் சமூக வலைதளத்தில் பிரத்யேகமாக போஸ்டர் வடிவமைப்புகளை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு நாயகியாக மாளவிகா மோகனனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது:

"இதுதான் நான் விஜய் சாரை சந்தித்த முதல் நாள். அன்று 'மாஸ்டர்' படத்தின் பூஜை நடந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பதற்றமாகவும், அவர் அருகில் பயத்துடனும் இருந்தேன். அன்று எங்களுக்குப் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், பிறகு 6 மாதங்களில் அவர் என் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறுவார் என்று எனக்குத் தெரியாது. புதிய விஷயங்களில் ஆர்வம் கொண்டவர், முடிந்தவரையில் அனைத்து விஷயங்களிலும் உற்சாகமானவர். வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளக் கூடியவர், அன்பானவர், தயிர்சாத விரும்பி. சீக்கிரம் தூங்கிவிடுவதைத் தவிர்த்து 4 மணிக்கு எல்லாம் எழுந்திருக்கக் கூடியவர், ஒவ்வொரு சூழலுக்கும் அதன் நேர்மறையான பக்கத்தைச் சுட்டிக்காட்டக் கூடியவர். உலகமே அழிந்து கொண்டிருந்தாலும் சரி.

குறைவாகப் பேசக்கூடிய ஒரு மனிதர். ஆனால், அவரைப் போல சொன்ன வார்த்தைகளையும், வாக்குகளையும் நினைவில் வைத்து அதை நிறைவேற்றும் யாரையும் நான் பார்த்ததில்லை. இனிமேல் இப்படி ஒருவர் உருவாகவே முடியாது என்ற வகையைச் சேர்ந்த தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்".

இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE