அனைத்துக் கோமாளிகளையும் பார்க்க கடவுள் வலிமை கொடுத்துள்ளார்: விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி

By செய்திப்பிரிவு

அனைத்துக் கோமாளிகளையும் பார்க்க கடவுள் வலிமை கொடுத்துள்ளார் என்று விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களுக்கு ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்த் திரையுலகில் சில பிரபலங்களுக்கும் கரோனா தொற்று இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்குக் கரோனா தொற்று என்று செய்திகள் பரவின. நயன்தாராவுக்குக் கரோனா தொற்று இருப்பதால் அவரும் விக்னேஷ் சிவனும் தனிமைப்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இது தொடர்பாக ஊடகத்துக்குப் பேட்டியளித்து தெளிவுபடுத்தினாலும், தொடர்ச்சியாக நயன்தாராவுக்கு கரோனா என்று செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தன.

தற்போது இது தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

"இப்படித்தான் எங்களைப் பற்றிய, கரோனாவைப் பற்றிய செய்திகளை, ஊடகத்தினரின், சமூக ஊடகத்தினரின் கற்பனைகளை நாங்கள் பார்க்கிறோம். எப்படியிருந்தாலும், எங்கள் நலவிரும்பிகளுக்கு, நாங்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்கிறோம். அனைத்துக் கோமாளிகளையும், அவர்கள் கோமாளித்தனங்களையும் பார்க்க கடவுள் எங்களுக்குப் போதுமான வலிமையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறார். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்".

இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுடன் வீடியோ செயலி ஒன்றின் மூலம் சிறு குழந்தைகள் நடனமாடுவது போல், இருவரும் நடனமாடி வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE