ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மலாலாவுக்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைத் சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை கடந்த 2012-ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், உயர் தப்பினார் மலாலா.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது.
இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மலாலா தற்போது தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
இதற்கு உலகம் முழுக்க பலரும் சமூக வலைதளங்களில் மலாலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் மலாலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரியங்கா கூறியுள்ளதாவது:
வாழ்த்துக்கள்! ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நீங்கள் பெற்ற தத்துவம், அரசியல், பொருளாதாரம் படிப்புக்கான பட்டம் ஒரு சாதனை. எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமைக்கும் மலாலா சொந்தக்காரர் ஆனார்.