கரோனா ஊரடங்கில் திறமையாளர்களை ஊக்குவிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார் மஞ்சிமா மோகன்.
கரோனா அச்சுறுத்தலால் எந்தவிதப் படப்பிடிப்புமே இல்லாமல் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளத்தின் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சிலர் வீட்டிலிருந்தபடியே சமூக இடைவெளியுடன் குறும்படத்திலும் நடித்துள்ளனர்.
'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் பிரபலமான மஞ்சிமா மோகன், திறமையாளர்களை ஊக்குவிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக மஞ்சிமா மோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நான் 'ஒன் இன் எ மில்லியன்' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியுள்ளேன். அதை மிகச்சிறந்த திறமைகளை ஊக்குவிக்கும் பொருட்டுதான் ஆரம்பித்தேன். இந்தத் தளத்தை ஆரம்பிக்கும் முன்னர் நான் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தேன். இதில் நடத்தப்படும் போட்டிகள் வழக்கமானதாக இருக்கக்கூடாது என்பதுதான் அது.
அதற்குப் பதிலாக இந்தத் தளம் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் குழுமமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இக்குழுமத்தில் திறமையாளர்கள் கைவினை செயல், நடனம், இசை, பாடல் என தங்கள் திறமைகளை, பதிவேற்றிப் பாராட்டுகளைப் பெறலாம். இந்தத் தளம் ஓர் இரவில் நடந்த மாற்றம் கிடையாது. எனது கல்லூரி நாட்கள் முதலாகவே இந்தத் தளம் பற்றிய எண்ணம் என் மனதில் இருந்தது.
உலகமே எதிர்மறைத் தன்மையில் இயங்கும் இந்தச் சூழலில் அனைவரிடத்திலும் பாசிட்டிவ் தன்மையை வளர்க்க இந்த ஏற்பாடு மிகச்சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். இச்சூழல் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகும் இதனைத் தொடர்ந்து நடத்துவேன்".
இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.