நயன்தாராவுக்குக் கரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவலுக்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களுக்கு ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்த் திரையுலகில் சில பிரபலங்களுக்கும் கரோனா தொற்று இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்குக் கரோனா தொற்று என்று செய்திகள் பரவின.
முன்னணி நடிகை என்பதால் இந்தச் செய்தி வைரலாகப் பரவியது. அதில் நயன்தாராவுக்குக் கரோனா தொற்று இருப்பதால் அவரும் விக்னேஷ் சிவனும் தனிமைப்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இது தொடர்பாக நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் கூறுகையில், "நயன்தாரா நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவருக்குக் கரோனா தொற்று எல்லாம் இல்லை. அது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை" என்று தெரிவித்தார்.