விஜய்க்கு நாயகியாகும் ராஷ்மிகா மந்தனா?

By செய்திப்பிரிவு

மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணையவுள்ள படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் இந்தப் படம் வெளியாகியிருக்கும்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தக் கூட்டணி இணைப்பில் உருவாகும் 4-வது படம் இதுவாகும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் ராஷ்மிகா, தமிழில் கார்த்தி நடித்து வரும் 'சுல்தான்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

விஜய்க்கு நாயகியாக நடிக்கவுள்ளது குறித்து விசாரித்தபோது, "தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அந்தப் பணிகள் முடிந்தவுடன்தான் விஜய்யுடன் யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற பேச்சுவார்த்தைகள், நடிகர்கள் ஒப்பந்தம் தொடங்கும். அதுவரை வெளியாகும் அனைத்துச் செய்திகளும் வதந்தியே" என்று தெரிவித்தார்கள்.

தற்போதைக்கு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளராக தமன் பணிபுரியவுள்ளார் என்பது மட்டுமே உறுதியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE