திரைப்படமாக உருவாகும் சுஷாந்த் வாழ்க்கை

By செய்திப்பிரிவு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்தின் தற்கொலை பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்தான் சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை குறித்த திரைப்படம் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நிகில் ஆனந்த் இயக்குகிறார்.

இதுகுறித்து நிகில் ஆனந்த் கூறியிருப்பதாவது:

''சுஷாந்த் இன்று நம்மோடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மிகவும் வலிக்கிறது. சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு சராசரி மனிதருக்கும் சுஷாந்த் ஒரு உதாரணமாக இருந்தார். அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட. அவர் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நம்புகிறேன். அவரைப் பற்றி நான் எடுக்கும் படம் அவருக்கு ஒரு சமர்ப்பணமாக இருக்கும். சினிமா உலகில் அவரைச் சாகாவரம் பெற்றவராக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. சினிமாத் துறையில் இருக்கும் பலரை இப்படம் ஊக்குவிக்கும். வாரிசு அரசியலை விடுத்து திறமையாளர்களுக்கு பாலிவுட் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இரண்டு மாதங்களில் கரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். கதை, நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் படக்குழுவினர் கவனம் செலுத்தவுள்ளனர். இந்தியா முழுவதும் இப்படம் வெளியாகும். உலகம் முழுவதும் இப்படத்தைக் கொண்டு செல்வதற்கான முயற்சி எடுக்கப்படும்''.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE