ரேவதி, சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வரும் சன் டிவியின் 'அழகு' சீரியலில் நடிகை ஊர்வசி முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார்.
சினிமாவில் ' சூப்பர் மாம்' கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஊர்வசி சின்னத்திரையில் நடுவர், சிறப்பு விருந்தினர் எனப் பொறுப்பேற்றவர். தற்போது முழு நேர சீரியல் கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடிக்கிறார். அதற்கான ப்ரமோ வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஊரடங்கு காலகட்டத்துக்குப் பிறகு சினிமா, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நிறைய மாற்றங்கள் உருவாகும் சூழலில் நடிகை ரேவதி நடிப்பில் வரும் 'அழகு' சீரியலில், ஊர்வசி முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார். அவர் ஏற்று நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்துள்ளன. இந்தச் சூழலில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தற்போது படப்பிடிப்பு தடைப்பட்டிருக்கிறது. மீண்டும் இயல்பு நிலை திரும்பியதும் முழு முனைப்புடன் 'அழகு' சீரியலின் படப்பிடிப்பு தொடங்கும்.
நடிகைகள் ஊர்வசி, ரேவதி இருவரும் 80களில் பெரும் வரவேற்பைப் பெற்ற நாயகிகளாக வலம் வந்தவர்கள். மேலும், இருவரும் நெருங்கிய தோழிகள் என்பதால் இந்த சீரியலில் இருவரது பங்களிப்புக்கும் பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.