நடிகர் அபய் தியோல், ஃபிலிம்ஃபேர் விருதுகளைச் சாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒருவார காலமாகவே பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள், துறையில் இருக்கும் அரசியல் பற்றி, அவர்களுக்குக் கிடைத்த மோசமான அனுபவங்கள் பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.
தற்போது நடிகர் அபய் தியோலும் விருது நிகழ்ச்சிகளில் காட்டிய பாரபட்சம் குறித்துப் பகிர்ந்துள்ளார். 2011-ம் அண்டு ஜூலை மாதம் வெளியான படம் 'ஜிந்தகி நா மிலேகி தோபாரா'. ஹ்ரித்திக் ரோஷன், ஃபர்ஹான் அக்தர், அபய் தியோல் ஆகியோர் நடிக்க, ஸோயா அக்தர் இயக்கியிருந்த இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றை சென்னையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நடத்தும் கலக்கி என்ற பக்கத்தில் மறுவடிவமைத்துப் பகிர்ந்திருந்தனர்.
» ஆர்ஜே பாலாஜி பிறந்த நாள் ஸ்பெஷல்: ரசனைக்குரிய நகைச்சுவையும் மதிப்புக்குரிய சமூக அக்கறையும்!
இந்தப் போஸ்டரைப் பகிர்ந்து அபய் தியோல் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு:
" 'ஜிந்தகி நா மிலேகி தோபாரா' 2011-ம் ஆண்டு வெளியானது. இன்று இந்தத் தலைப்பை எனக்கு நானே ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொள்கிறேன் (வாழ்க்கை இரண்டாம் முறை வாய்க்காது என்பதே தலைப்பின் அர்த்தம்). மேலும் மன அழுத்தத்தில், ஏக்கத்தில் இருக்கும்போது பார்க்கச் சிறந்த படம்.
அப்போது அனைத்து விருது வழங்கும் விழாக்களும் என்னையும், ஃபர்ஹானையும் ஒரு படி கீழே இறக்கி உறுதுணை நடிகர்கள் பிரிவில்தான் பரிந்துரை செய்தன. ஹ்ரித்திக் மற்றும் கேத்ரீனா கைஃப் இருவரும் தான் நாயகன் - நாயகி பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டனர்.
அதாவது, துறையின் சொந்த விதியின் படி, இந்தப் படம், ஒரு ஆண், தனது நண்பர்களின் உதவியுடன், ஒரு பெண்ணைக் காதலிக்கும் கதை இது. நமக்கு எதிராக ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பல வழிகளில் இந்தத் துறையில் வேலை செய்வார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை அது வெட்கமற்று வெளிப்படையாகவே நடந்தது.
நான் எந்த விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. ஆனால் ஃபர்ஹான் கலந்து கொண்டார். அவர் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை".
இதோடு #familyfareawards என்ற ஹேஷ்டேகையும் அபய் தியோல் சேர்த்துள்ளார். மேலும் கலக்கி பக்கத்தையும் பாராட்டியுள்ளார். தியோலின் இந்தப் பகிர்வுக்கு ஃபாரா கான், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரன்வீர் ஷோரேவும், விருது வழங்கும் விழாக்கள் பற்றிக் கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார். ஒரு பிரபல வாரிசு நடிகர் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதாகவும், சிறந்த நடிகர்கள் பரிந்துரைப் பட்டியலில் அவரது பெயரே இருந்தது என்றும் ரன்வீர் நக்கலாகப் பகிர்ந்திருந்தார்.