சல்மான் கானின் அறக்கட்டளை ஒரு காட்சிப் பொருள் மட்டுமே; அரசாங்கம் விசாரிக்க வேண்டும் - அபினவ் காஷ்யப் மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு

இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம், பின்புலம் இல்லாமல் துறைக்குள் வருபவர்களை வாரிசுகள் நடத்தும் விதம் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல பிரபலங்கள் பேசி வருகின்றனர்.

2010-ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் 'தபாங்'. இந்தப் படத்தை அபினவ் சிங் காஷ்யப் இயக்கியிருந்தார். இவர் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப்பின் சகோதரர் ஆவார். 'தபாங்' முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் 'ஒஸ்தி' என்றும், தெலுங்கில் 'கப்பார் சிங்' என்றும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது.

முதல் பாகம் வெற்றி பெற்றாலும் இரண்டாம் பாகத்தை அபினவ் சிங் இயக்கவில்லை. 3 ஆண்டுகள் கழித்து 'பேஷாராம்' என்ற படத்தை அபினவ் இயக்கினார். அதன் பின் இன்றுவரை அவர் எந்தப் படமும் இயக்கவில்லை. தனக்கு வரும் வாய்ப்புகளைத் தடுத்தது சல்மான் கான் தரப்புதான் என்று குற்றம் சாட்டி அபினவ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் சல்மான் கான் குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அபினவின் பதிவு பாலிவுட்டில் பெரும் விவாதத்தை உருவாக்கியது. இந்நிலையில் சல்மான் கானின் ‘பீயிங் ஹ்யூமன்’ அறக்கட்டளை மீது பரபரப்பு குற்றச்சாட்டை அபினவ் சிங் வைத்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் அபினவ் காஷ்யப் கூறியுள்ளதாவது:

பீயிங் ஹ்யூமன் என்பது சல்மானின் தந்தை சலீம் கானின் மிகப்பெரிய கனவு. ஆனால் அந்த அறக்கட்டளை ஒரு காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது. ‘தபாங்’ படப்பிடிப்பின் போது என் கண்முன்னே 5 சைக்கிள்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த நாள் ஊடகங்களில் 500 சைக்கிள்கள் ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது ஊடகங்கள் மற்றும் நீதிமன்றத்தில் சல்மானின் மோசமான இமேஜை மாற்றுவதற்காக செய்யப்பட்ட ஒரு முயற்சி.

மேலும் பீயிங் ஹ்யூமான் சார்பில் 500 ரூபாய் ஜீன்ஸ் 5000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் பெயரில் வேறு என்னென்ன பணச் சலவைகள் நடைபெறுகிறது என்று எனக்கு தெரியாது. அவர்களுக்கு யாருக்கும் கொடுக்கும் எண்ணம் கிடையாது, மாறாக அவர்கள் எடுத்துக் கொள்ளவே செய்கிறார்கள். பீயிங் ஹ்யூமன் குறித்தும் அரசாங்கம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். என்னுடைய சார்பிலிருந்து என்னால் முடிந்த உதவிகளை அரசுக்கு செய்வேன்.

இவ்வாறு அபினவ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE