மலையாள இயக்குநர் சச்சியின் உடல் தகனம்

மறைந்த மலையாள இயக்குநர் சச்சி யின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.

மலையாள திரையுலகில் சிறந்த கதை ஆசிரியராகவும், இயக்குநராகவும் விளங்கிய சச்சி (48) கடந்த சில தினங்களுக்கு முன்பு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சிகிச்சைக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட்டதால், நேற்று முன்தினம் இரவு திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் காலமானார். சச்சிதானந்தம் என்கிற சச்சி திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். ‘ரன் பேபி ரன்’, ‘அனார்கலி’ , ‘ராமலீலா’ உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ப்ரித்விராஜ், பிஜு மேனன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தை அவர் இயக்கினார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவர் இயக்கிய ‘அய்யப்பனும் கோஷியும்’ பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சச்சி நேற்று முன் தினம் காலமானார். அவரது உடல் நேற்று மாலை கொச்சியில் தகனம் செய்யப்பட்டது. இதில், மலையாள திரையுலகினர் பலரும் கலந்துகொண்டனர். சச்சியின் விருப்பப்படி அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE