இசையமைப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணிகளுமே நடைபெறவில்லை. இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களின் ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் 19-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால், இசையமைப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
எந்தவொரு பாடல் பதிவு, இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி என எதுவுமே இல்லாததால் இசையமைப்பு கலைஞர்கள் தவித்துவந்தனர். அவர்களுக்கு உதவ முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்.
இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் தலா 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். இமான், அனிருத், ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் தலா 2 லட்சமும், தமன் ஒன்றரை லட்சமும், விஜய் ஆண்டனி மற்றும் ஜிப்ரான் இருவரும் தலா 50000 ரூபாயும் வழங்கியுள்ளனர். இந்த தொகையை வைத்து இசையமைப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா 2000 ரூபாய் வழங்கியுள்ளது இசையமைப்பாளர்கள் சங்கம்.