அறிவியல் தொழில்நுட்பத்தில் சுஷாந்த் மிகுந்த ஆர்வம் கொண்டவர்: சர்வதேச விண்வெளி பல்கலைக்கழகம் புகழாரம்

By பிடிஐ

பிரான்ஸில் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி பல்கலைக்கழகம் சுஷாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். சுஷாந்த் மறைவு குறித்த ஹேஷ்டேகுகள் ட்விட்டர் தளத்தை ஆக்கிரமித்தன.

இந்நிலையில் பிரான்ஸில் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி பல்கலைக்கழகம் சுஷாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச விண்வெளி பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

''பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் குறித்த கல்வியில் சுஷாந்த் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எங்கள் பல்கலைக்கழகத்தை சமூக வலைதளங்களில் அவர் பின்தொடர்ந்தும் வந்தார்,.

கடந்த ஆண்டு எங்கள் அழைப்பை ஏற்று சர்வதேச விண்வெளி பல்கலைக்கழகத்தைப் பார்வையிட வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவரால் வர இயலவில்லை. அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்களின் ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களின் மனதில் அவர் என்றும் நீங்காமல் நின்றிருப்பார்''.

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தான் இறக்கும் தருவாயில் சர்வதேச விண்வெளி பல்கலைக்கழகத்தின் டி-ஷர்ட்டை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE