‘பேசுவதை விட மவுனமே சிறந்தது’ - சுஷாந்த் குறித்த ரசிகரின் கேள்விக்கு வித்யுத் ஜம்வால் பதில்

By ஐஏஎன்எஸ்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். சுஷாந்த் மறைவு குறித்த ஹேஷ்டேகுகள் ட்விட்டர் தளத்தை ஆக்கிரமித்தன.

இந்நிலையில் ‘துப்பாக்கி’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் வித்யுத் ஜம்வாலின் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், ''ஏன் சுஷாந்த் மரணம் குறித்து நீங்கள் எந்தப் பதிவும் இடவில்லை'' என்று கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள வித்யுத் ஜம்வால், ''வாயை மூடிக் கவனித்தால் பேசுவதை விட மவுனமே சிறந்தது. வெளிவராத கண்ணீரும், புகழுரைகள் எழுதாமல் இருப்பதும், ஒருவகையான இரங்கலை வெளிப்படுத்துவதுதான்.

இறந்துபோன ஆன்மாவோ, அவர்களது குடும்பத்தினரோ இந்த ட்வீட்களைப் படிப்பதில்லை. பின்பு யாருக்காக எழுதுவது? அனைவரும் இரங்கலையும் அனுதாபங்களையும் வெளிப்படுத்துகிறோம். நான் அதை அமைதியாகச் செய்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE