கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இன்றி பரிதவித்தனர்.
அப்போது பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில்வாகனங்களை ஏற்பாடு செய்து, புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். மும்பையில் தவித்த 200 தமிழக தொழிலாளர்களையும் அவர் பேருந்தில் ஊருக்கு அனுப்பினார். ஒடிசாவை சேர்ந்த 169 பெண்கள் கேரளாவில் பணியாற்றி வந்தனர். அவர்கள் விமானத்தில் சொந்த மாநிலம் திரும்ப சோனு சூட் உதவினார்.
இதை நினைவுகூர்ந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வரின் முக்கியசாலை சந்திப்பில் ஒரு குழுவினர் சோனு சூட்டின் பிரம்மாண்ட போஸ்டரை வைத்து அதை வழிபட்டனர். அந்த போஸ்டரில், கரோனா வைரஸை எதிர்த்து போரிடும் மன்னர்என்று புகழாரம் சூட்டப்பட்டது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய ஒடிசா நடிகர் சப்யாச்சி மிஸ்ரா, நடிகை ராணிபண்டா ஆகியோரின் போஸ்டர்களையும் மக்கள் வழிபட்டனர்.
நடிகர் சோனு சூட்டின் உதவியால் வீடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் அவரது புகைப்படத்தை தங்களது பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தியவீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே பரவி வருகின்றன. இதுகுறித்து நடிகர் சோனு சூட் கூறும்போது, "என்னை கடவுளாக பார்க்க வேண்டாம். உங்கள் அன்பும், வாழ்த்தும் மட்டும் போதும்" என்று தெரிவித்தார்.