'சதிலீலாவதி' வெற்றிக்கு கோவை சரளாவும் ஒரு காரணம் என்று கமல் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
1995-ம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான படம் 'சதிலீலாவதி'. அனந்து கதை, பாலு மகேந்திரா மற்றும் கமல் திரைக்கதை மற்றும் வசனத்தை கிரேஸி மோகன் எழுதியிருந்தார். கமல் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் கமல், ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த ஜூன் 10-ம் தேதி கிரேஸி மோகனின் முதலாம் ஆண்டு நினைவு தினமாகும். அன்றைய தினம் அவரோடு பயணித்தவர்கள் ஒன்றிணைந்து ஜூம் செயலி மூலமாக தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இதனை டோக்கியோ தமிழ்ச் சங்கம் நடத்தியது. இதில் கமலும் கலந்து கொண்டார்.
அப்போது 'சதிலீலாவதி' படம் குறித்த நினைவுகள் குறித்து கமலிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
"பாலு மகேந்திரா ரொம்ப சீரிய்ஸான ஆள். சினிமாவைப் பற்றி அணு அணுவா தெரியும். கேமராவைக் கொடுத்தால் ரிப்பேர் செய்துவிடுவார். ஓடாத நடிகரையும், ஓட வைத்துவிடுவார். அவர் ஒரு பெரிய மெக்கானிக். 'சதிலீலாவதி' பண்ணும் போது நல்லாவே இருக்கு, கடைசியா என்னை கேமராமேன் ஆக்கிட்டீங்க என்று சொன்னார். நிறைய பேசி நடிப்போம். அதை எங்கு குறைக்க வேண்டுமோ அதை மட்டும் மட்டுப்படுத்தி சமைத்துவிடுவார். அந்தளவுக்கு பெரிய சமையல்காரர். நானும், கிரேஸி மோகனும் நறுக்கிப் போட போட சமைத்துக் கொண்டே இருந்தார்.
பாலு மகேந்திரா எல்லாம் எனக்கு நண்பர், என்ன பாலு என்றெல்லாம் பேசிக் கொள்வோம். ஆனால், அவர் எனக்கு வாத்தியார். அவர் எனக்கு எப்போது கற்றுக் கொடுத்தார் என்று தெரியாது. தமிழ் எப்படி கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டால் எப்படி தெரியாதோ, அதே போல் தான் பாலு மகேந்திராவும். அவரிடம் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டால் எனக்கு லிஸ்ட் போடத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு விஷயமும் சரியாக பண்ணும் போது, பாலு மாதிரி பண்ணியிருக்கோம் என்று நினைப்பேன். எனக்கு மாதிரியே பல பேருக்கு கொடுத்துவிட்டு போனது தான் அவர் செய்த பெரிய கொடை.
தமிழ்த் திரையுலகில் பல பேர் அனந்து சாருக்கு நன்றிச் சொல்வார்கள். ஏனென்றால் அவரை மாதிரி ஒருத்தர் இருந்தார் என்று சொன்னால் இப்போது யாரும் நம்ப மாட்டார்கள். பாலு மகேந்திரா சார் காமெடியை ரொம்ப கத்தரிப்பார். அப்போது கிரேஸி மோகன் "என்ன சார் என்னை செட்டிற்குள் விடவே மாட்டிக்கிறார், அதட்டுகிறார்" என்பார்.
கோவை மொழிவழக்கு என்று முடிவு செய்த உடனே, நாயகியை நானே முடிவு பண்ணிட்டேன். அதில் பாலு மகேந்திராவுக்கு ரொம்ப வருத்தம். கோவை சரளாவின் திறமை அப்போது பலருக்கும் தெரியாது. எனக்கு தெரிந்தது. அவர் அந்தப் படத்துக்குள் வந்தது தான் எனக்கு ஸ்ப்ரிங் போர்டு மாதிரி அமைந்தது. 'சதிலீலாவதி' படத்தில் எனக்கு ஏதாவது பெயர் வந்தால், அதில் 50% கோவை சரளாவுக்குக் கொடுக்கலாம்"
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.