தெலுங்கில் பெரும் வரவேற்பு பெற்ற 'மனம்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய சூர்யா ஆசைப்பட்டார்.
2டி நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் '24'. பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் 2016-ம் ஆண்டு மே 6-ம் தேதி வெளியானது. இதில் நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன், அஜய், மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.
'24' படத்தின் 2 ஆம் பாகத்துக்காக தன்னை சூர்யா அழைத்துப் பேசவில்லை என்றும், 'மனம்' ரீமேக்கிற்கே அழைத்துப் பேசினார் என்றும் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் விக்ரம் குமார்.
» இதுதான் என் தாஜ்மஹால்: பழைய வீட்டின் நினைவுகளைப் பகிரும் சிவகுமார்
» வாழ்க்கை என்பது யாரும் இறப்பதற்கு அல்ல: ரசிகைக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அட்வைஸ்
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"முதலில் விக்ரமை வைத்துதான் '24' படம் தொடங்கப்பட்டது. பின்பு ஏன் மாறியது உள்ளிட்ட தகவல்களை இப்போது சொல்ல விரும்பவில்லை. இந்தப் படம் பண்ண வேண்டாம் என்று நிறுத்துவிட்டோம். பி.சி.ஸ்ரீராம்தான் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளாராக ஹாரிஸ் ஜெயராஜ் எனப் பணிபுரிந்தார்கள். இலியானா நாயகியாக நடித்தார்.
அந்தப் படம் கைவிடப்படவுடன்தான் தெலுங்கில் ஒரு வாய்ப்பு வந்தது. உடனே 'இஸ்க்' பண்ணினேன். 'மனம்' இயக்கினேன். சூர்யா சாருக்கு 'மனம்' படத்தை தமிழில் பண்ண வேண்டும் என்ற ஆசையிருந்தது. சூர்யா, கார்த்தி, சிவகுமார், ஜோதிகா ஆகியோரை வைத்து 'மனம்' பண்ண முடியும். அதற்காக அவரைச் சந்தித்தேன்.
அப்போது என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதைச் சொல்கிறேன். அது பிடிக்கவில்லை என்றால் 'மனம்' பண்ணலாம் என்றேன். '24' கதையைச் சொன்னேன். அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால், உடனே பண்ணினோம்".
இவ்வாறு விக்ரம் குமார் தெரிவித்துள்ளார்.