டெல்லி மருத்துவர்களுக்குச் சம்பளம் எங்கே? - நடிகை ரிச்சா சட்டா கேள்வி

By ஐஏஎன்எஸ்

ஆபத்தான கோவிட்-19 சூழலில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவச் சேவை செய்து வரும் டெல்லி மருத்துவர்களுக்கு ஏன் சம்பளம் தரப்படவில்லை என நடிகை ரிச்சா சட்டா கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக, டெல்லி கஸ்தூர்பா மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் சங்கம் ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தது. அதில், "கடந்த மூன்று மாதங்களாகப் பயிற்சி மருத்துவர்களுக்கு சம்பளம் தரப்படவில்லை. சம்பளம் இல்லையென்றால் வேலை இல்லை. ஜூன் 16-ம் தேதிக்குள் எங்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை என்றால் நாங்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையொட்டியே நடிகை ரிச்சா சட்டாவும் தற்போது கேள்வியெழுப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிச்சா, "நமது காலகட்டத்தின் மிகப்பெரிய நோய்த்தொற்று சமயத்தில் கூட மருத்துவர்களுக்கு ஏன் சம்பளம் தரப்படுவதில்லை" என்று கேள்வி கேட்டுப் பகிர்ந்துள்ளார்.

'கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' திரைப்படத்தின் மூலம் பிரபலமான ரிச்சா, கடைசியாக கங்கணா ரணாவத்தின் தோழியாக 'பங்கா' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE