ஆபாசமான பின்னூட்டம்: அபர்ணா நாயர் கடும் சாடல்

By செய்திப்பிரிவு

ஆபாசமான பின்னூட்டம் இட்டவரை அபர்ணா நாயர் கடுமையாகச் சாடியுள்ளார்.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அபர்ணா நாயர், 'காக்டெயில்', 'காயம்', 'பியூட்டிஃபுல்', 'தட்டத்தின் மறயத்து', 'சைலன்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர். தமிழில் 'எதுவும் நடக்கும்' என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

எப்போதுமே சமூக வலைதளத்தில் தீவிரமாக இருப்பவர் அபர்ணா நாயர். அவ்வப்போது தனது படங்கள் குறித்து செய்திகள், புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அவ்வாறு சமீபத்தில் தனது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு ஒருவர் ஆபாசமான கருத்தைப் பதிவிட்டார்.

உடனே, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டு அபர்ணா நாயர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தப் பக்கத்தை நான் எனது நல விரும்பிகளுடன் உரையாடுவதற்காகப் பயன்படுத்துகிறேன். யாரும் வந்து ஆபாசமான பின்னூட்டங்கள் மூலம் தங்கள் பாலியல் கற்பனைகளுக்கு வடிகால் தேடிக் கொள்வதற்காக அல்ல. உங்களது பாலியல் தேவைகளை நான் பூர்த்தி செய்வேன் என்றோ, இப்படியான மோசமான பின்னூட்டங்களை நான் தவிர்ப்பேன் என்றோ நினைத்தால், நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதுபோன்ற அருவருக்கத்தக்க நடத்தையைச் சகித்துக்கொள்ள நான் இங்கு இல்லை.

அன்பார்ந்த அஜித் குமார், உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார், வளர்ந்து கொண்டிருக்கிறார். உங்கள் புகைப்படங்களில் அவரை நீங்கள் இறுக்கமாகப் பிடித்திருக்கிறீர்கள். அதேபோல நானும் ஒருவரது மகள் தான். அவர் என்னைத் தன் இதயத்தோடு இறுக்கமாக அணைத்து வைத்திருக்கிறார். இதுபோன்ற விஷயங்களைச் செய்யும்போது அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான் இங்கு இருப்பது எனது பணியைப் பற்றி விளம்பரப்படுத்த. உங்களுக்கு 30 விநாடிகள் இன்பம் தருவதற்காக அல்ல".

இவ்வாறு அபர்ணா நாயர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE