மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர் ஜெ.அன்பழகன்: ஜெயம் ரவி இரங்கல்

மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர் ஜெ.அன்பழகன் என்று நடிகர் ஜெயம் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 62. அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜெ.அன்பழகன் தயாரித்த 'ஆதிபகவன்' படத்தின் நாயகனான ஜெயம் ரவி விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அன்பழகன் மறைவுச் செய்தி கேட்டு கடும் துயருற்றேன். அவர் ஒரு நம்பிக்கை தரும் அரசியல் தலைவர் மட்டுமல்ல, நல்லிதயம் கொண்ட, மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர். மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தவர்.

எனது திரைப்படம் 'ஆதிபகவன்' படத்தைத் தயாரித்தபோது, விலை மதிப்பற்ற மிகச்சிறந்த நேரத்தை அவருடன் கழித்திருக்கிறேன். அந்த நினைவுகள் எப்போதும் மனதில் இனிமையானதாக நீங்காது இருக்கும். அவரோடு உரையாடியபோது கலை மீதும் திரைப்படங்கள் மீதும் அவரது பார்வை பலமுறை என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

பெருமைமிக்க அவரது அரசியல் பணிகள் மற்றும் அயராத மக்கள் பணிகள் மேலும் அவரது திரைப் பணிகளுக்காகவும் என்றென்றும் மக்கள் மனதில் நீங்காது அவர் குடியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

கடும் துயர்மிக்க இந்த கோவிட்-19 சூழலில் அவரது உடல்நலத்தையும் பொருட்படுத்தாது அவர் மக்கள் பணிகளில் தொடர்ந்து இயங்கியது அவரது மனிதத்தை என்றென்றும் சொல்லும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்".

இவ்வாறு ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE