மல்லேஸ்வரி பயோபிக் இயக்குநர் கவலைக்கிடமா? - தயாரிப்பாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவிருந்த சஞ்ஜனா ரெட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகளை படத்தின் தயாரிப்பாளர் மறுத்துள்ளார்

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி, இந்தியாவின் சார்பில் பெண்கள் பளு தூக்குதல் பிரிவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த ஜூன் 1-ஆம் தேதி அன்று மல்லேஸ்வரியின் பிறந்த நாளை முன்னிட்டு மல்லேஸ்வரியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகவுள்ளதாக படத்தைத் தயாரிக்கும் கோனா வெங்கட் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்தது. 'ராஜுகாடு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சஞ்சனா ரெட்டி இந்தப் படத்தை இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திங்கட்கிழமை ஹைதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சஞ்சனா ரெட்டி அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் கவலைக்கிடமான நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் இவற்றை படத்தின் கதாசிரியரும், தயாரிப்பாளருமான கோனா வெங்கட் மறுத்துள்ளார்.

"சஞ்சனாவின் உடல்நிலையில் எந்தப் பிரச்சினையும் இல்லை, கடந்த மூன்று நாட்களாக அவர் நீர் சார்ந்த உணவையே சாப்பிட்டு வந்ததால் உடல் பலவீனமாகி மயக்க முற்றுள்ளார். நரம்பியல் சிகிச்சை தொடர்பான சில பரிசோதனைகள் எடுத்த பின் அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார்" என்று கோனா வெங்கட் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE