கரோனா எனும்‌ அடி, பிசாசுத்‌தனமான அசுர அடி: ரஜினி

By செய்திப்பிரிவு

கரோனா எனும்‌ அடி, பிசாசுத்‌தனமான அசுர அடி என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்று மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கரோனா அச்சுறுத்தலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தினசரித் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

அவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தொடர்ச்சியாக உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருபவர்களுக்கு ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ரஜினி கூறியிருப்பதாவது:

"கரோனா வைரஸ்‌ தொற்றால்‌ அவதிப்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல்‌ தங்களது உதவிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்‌ ரஜினி மக்கள்‌ மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும்‌ எனது மனமார்ந்த பாராட்டுகளையும்‌ மகிழ்ச்சியையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்குப் பட்டிருக்கும்‌ கரோனா எனும்‌ அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்‌தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில்‌ பல விதங்களில்‌ நமக்குப்‌ பல கடுமையான வேதனைகளைத் தரும்‌.

உங்களது குடும்பத்தாரின்‌ எல்லாத் தேவைகளையும்‌ பூர்த்தி செய்து அவர்களைப் பாதுகாப்பதுதான்‌ உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும்‌ சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும்‌, முகக்‌ கவசத்தை அணியாமலும்‌ இருக்காதீர்கள்‌.

ஆரோக்கியம்‌ போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!!"

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE