சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்கலாம் - தெலங்கானா அரசு அனுமதி

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் ஒரு சில மாநிலங்களில் சினிமா படப்படிப்புகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதியளித்துள்ளன.

அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

இதற்கான அரசாணையில் படப்பிடிப்புகளில் குறைவான நபர்களே கலந்துகொள்ள வேண்டும் என்றும், அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் திரையரங்குகள் திறப்பதற்கான எந்த அறிவிப்பையும் தெலங்கானா அரசு வெளியிடவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் படப்பிடிப்பை தொடங்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும் முதல்வர் சந்திரசேகர் ராவிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும் தெலங்கானா தலைமை செயலர் மற்றும் அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ் ஆகியோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அரசு அறிவுறுத்திய நெறிமுறைகளின் படி படப்பிடிப்பு நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE