அனிருத் நாயகனாக நடித்தால் நான் தயாரிப்பாளர்: சிவகார்த்திகேயன்

By செய்திப்பிரிவு

அனிருத் நாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கத் தயாராக இருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். 'இந்தியன் 2', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'டாக்டர்', 'சீயான் 60' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், அவ்வப்போது அனிருத் நாயகனாக நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாவதும் வழக்கம்.

தனக்குப் படங்களில் நடிக்க ஆசையில்லை என்றும், இசை ஆல்பத்தில் மட்டுமே நடிக்க ஆசை என்றும் அனிருத் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இன்று அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார்.

அதற்கு சிவகார்த்திகேயன், "சார்.. எப்போனாலும் சரி, என்னைக்குன்னாலும் சரி. நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத் தயாரிப்பாளர் நான் தான். நன்றி சார்" என்று கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார். இந்த கருத்துக்கு பலரும் தங்களுடைய விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக 'டாக்டர்' படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், "அந்தப் படத்தை இயக்க ஒரு வாய்ப்பு கேட்டு வைச்சுக்கிறேன். மனசுல வைச்சுக்கோங்க" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE