பேச்சாளருடன் திருமணம்: ‘ஆயுத எழுத்து’ நாயகியின் காதல் பகிர்வு

பேச்சாளரைத் திருமணம் செய்ய உள்ளதாக 'ஆயுத எழுத்து' நாயகி சரண்யா தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆயுத எழுத்து’ தொடர் நாயகி சரண்யா, தொடர்ந்து காதலர் ராகுல் சுதர்ஷனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில் இது தொடர்பாக சின்னத்திரை நடிகை சரண்யாவிடம் கேட்டபோது அவர் கூறியிருப்பதாவது:

‘‘என்னோட நிறைய நேர்காணல்களில் பேசும்போது, ‘ப்ரவுன் கலர்ல, நிறைய தாடி வைத்த ஒரு தமிழ்ப் பையனைத்தான் திருமணம் செய்வேன்!’னு கூறிக்கொண்டே இருப்பேன். அது இப்போது உண்மையாகிவிட்டது. எனக்கு எப்படி தமிழில் கவிதை, கட்டுரை என இதழியல் சார்ந்து ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ, அதேபோல, ராகுல் சுதர்ஷனுக்கு ஆங்கிலத்தில் நிறைய புலமை உண்டு. இருவரும் மாறி மாறி அப்படித்தான் கவிதைகளைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம்.

அவர் ஒரு சிறந்த பேச்சாளர். எழுத்திலும் ஆர்வமுள்ளவர். தமிழ்ப் பையன். நல்ல நண்பர்களாக இருந்த நாங்கள், இப்போ சமீபத்துல கடந்த காதலர் தினத்தப்போதான் காதலை வெளி உலகத்தோட ஷேர் செய்துகொண்டோம். இதழியல் துறை அனுபவத்தோடு செய்தி வாசிப்பாளராக கேரியரைத் தொடங்கி இப்போ சீரியல் நடிகையாக பயணித்து வருகிறேன். என்னோட அரசியல் பதிவு தொடங்கி மக்கள் நலப் பதிவு வரைக்கும் எல்லாவற்றிலும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன். இப்போது என்னுடைய காதல், திருமண வாழ்க்கை குறித்தும் அவ்வாறே பதிவிட்டிருக்கிறேன்.

இந்த எதார்த்தத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டு எனக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல, பொதுத் தளத்தில் காதல் விஷயத்தை வெளிப்படுத்தியதும், ‘திருமணம் எப்போது?’ எனப் பலரும் கேட்கின்றனர். அதுக்கு உடனே அவசரமில்லை. இன்னும் சில மாதங்களுக்கு காதலர்களாகவே பயணிக்க உள்ளோம். எங்கள் இரு வீட்டிலும் திருமண வேலைகள் குறித்து பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு திருமணம் இருக்கும்!"

இவ்வாறு சரண்யா தெரிவித்தார்.

‘ஆயுத எழுத்து’ சீரியல் படப்பிடிப்பு தொடங்கியாச்சா?’ என சரண்யாவிடம் கேட்டதற்கு ‘‘இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகு வருகிற புதன்கிழமை முதல் ’ஆயுத எழுத்து’ சீரியல் படப்பிடிப்புக்குப் புறப்படுகிறேன். சீரியல்ல ‘கலெக்டரம்மா’ கதாபாத்திரமாச்சே. சமூக வலைதளத்தில் பலரும், ‘கலெக்டரம்மா எப்போ வரப்போறிங்க..?’ன்னு ஆர்வமா கேட்டுக்கிட்டே இருந்தாங்க. இதோ வந்துட்டோம்!" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE