இயக்குவதற்கு வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன்: ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே 'தி ஸ்லீப்வாக்கர்ஸ்' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். அது வெளியானதும் ரசிகர்களின் கருத்தை அறிய ஆவலாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவையா நடித்திருக்கும் இந்தக் குறும்படத்தின் கதாசிரியரும் ராதிகாதான்.

"எனக்கு இயக்கம் பிடித்திருந்தது. மக்கள் அதைப் பார்க்கப் போகிறார்கள் என்பதை நினைத்து நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். இயக்குவதற்கு இன்னும் வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன். பார்க்கலாம். படம் தூக்கத்தில் நடக்கும் பிரச்சினையைப் பற்றியது அல்ல. படம் எதைப் பற்றியது என்பது ட்ரெய்லரில் முழுவதும் தெரியாது. இப்போது அதைப் பற்றிச் சொல்ல முடியாது. நான் கடந்த வருடம் டைவிங் பயிற்சியை ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்தப் படத்துக்கான யோசனை வந்தது" என்கிறார் ராதிகா ஆப்தே.

ஊரடங்கு காலத்தை தனது லண்டன் வீட்டில் கணவர் பெனடிக்ட் டெய்லருடன் கழித்து வரும் ராதிகா, பணியின் காரணமாக அங்கிங்கு என எப்போதும் பயணப்பட்டுக் கொண்டே இல்லாமல் வீட்டில் இருப்பது நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்,

"நான் கதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன். எழுத முயல்கிறேன். இந்த இடைவெளி மிக நன்றாக இருக்கிறது. நீண்ட நாட்களாக இது போல ஒரு ஓய்வு எனக்குக் கிடைக்கவில்லை. மேலும், எனக்குச் சமைப்பது பிடிக்கும். இப்போது அதற்கு நிறைய நேரம் இருக்கிறது. லண்டனில் வானிலை நன்றாக இருக்கிறது. நேற்றிலிருந்து திடீரென மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. மேலும் லண்டனில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளது. எனவே நடைப்பயிற்சிக்கோ, சைக்கிள் ஓட்டவோ வெளியே செல்ல முடிகிறது" என்று ராதிகா பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE