'24' படத்தின் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.
2டி நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் '24'. பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம் 2016-ம் ஆண்டு மே 6-ம் தேதி வெளியானது. இதில் நித்யா மேனன், சமந்தா, சரண்யா பொன்வண்ணன், அஜய், மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது.
'24' படத்தின் வெற்றிக்குப் பிறகு, தமிழில் அடுத்ததாக விக்ரம் குமார் படம் இயக்கவே இல்லை. தெலுங்கில் 'ஹலோ' மற்றும் 'கேங் லீடர்' ஆகிய படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து நாக சைத்தன்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
இதனிடையே மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளது குறித்து விக்ரம் குமார் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் "சூர்யா சாரும் என்னிடம் பல முறை அடுத்து எப்போது என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவரிடம் ஒரு கதை ஒன்றைக் கூறியுள்ளேன். அவருக்கு அது பிடித்திருந்தது. 2021-ல் மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார் விக்ரம் குமார்.
தற்போது இயக்குநர் ஹரி மற்றும் வெற்றிமாறன் ஆகியோரது படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா. அதனைத் தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் எனத் தெரிகிறது.