சிம்புவின் திருமண வதந்தி தொடர்பாக டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரைப் பற்றி காதல், திருமணம் என பல்வேறு வதந்திகள், செய்திகள் என வெளியாகியுள்ளன. லண்டன் தொழிலதிபர் மகள் ஒருவரை காதலித்து வருவதாகவும் இன்று (ஜூன் 7) காலை சிம்புவுக்கு திருமணம் என்றும் செய்திகள் வெளியாகின.
சிம்புவுக்கு திருமணம் என்றவுடன், இந்தச் செய்தி தீயாய் பரவியது. இது தொடர்பாக சிம்புவின் பெற்றோர்களான டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.
எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்"
இவ்வாறு டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இணைந்து தெரிவித்துள்ளனர்.