மகாராஷ்டிரா அரசின் அறிவிப்புகள் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது -  இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 

By ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் ஒரு சில மாநிலங்களில் சினிமா படப்படிப்புகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதியளித்துள்ளது.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனால் கடும் நிபந்தனைகளுடன் அம்மாநில அரசு சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிப்பது, படப்பிடிப்பில் குறைவானவர்களே கலந்து கொள்வது, 65 வயதான நடிகர் நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்புக்கு கண்டிப்பாக வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA) தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

‘பாலிவுட்டில் 65 வயதை கடந்த நடிகர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்துக்கு 65 வயது நபர்களை அழைத்து வருவது ஆபத்தானது தான். ஆனால் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்பதிலிருந்து 4 மணி நேரமாக படப்பிடிப்பு நேரத்தை குறைத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல், முதலில் அவர்களுடைய காட்சிகளை படமாக்கிவிட்டு அனுப்பி விடுவோம். அவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமையிலேயே வைத்திருப்போம்.

படக்குழுவினரை ஹோட்டலில் தங்க வைக்கும் அறிவிப்பும் செயல்படுத்தமுடியாதது. ஏனெனில் பெரும்பாலான ஹோட்டல்கள் தற்போது அரசாங்கத்தில் கரோனா தனிமை முகாம்களாக மாறியிருக்கின்றன. அதே போல நடிகர்களின் குடும்ப உறுப்பினர்களையே துணை நடிகர்களாக நடிக்க வைக்கும் அறிவிப்பும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. ஏனெனில் நடிகர்களின் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நடிகர்கள் அல்ல.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE