தனக்கும் யுவனுக்குமான நட்பு, திருமணம், மதமாற்றம்: ஷாஃப்ரூன் நிஷா விளக்கம்

தனக்கும் யுவனுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது உள்ளிட்ட விவரங்களை ஷாஃப்ரூன் நிஷா விவரித்துள்ளார்.

முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா 2014-ம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றினார். 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்கினார் ஷாஃப்ரூன் நிஷா. அப்போது பலரும் யுவனின் மதமாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். அதற்குத் தகுந்த பதில் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து யுவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கும், அவரிடமிருந்து வீடியோ வழியே பதில் வாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இதனிடையே தனக்கும் யுவனுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது, வீட்டில் எப்படி திருமணம் பேசி முடிவு செய்தார்கள் என்ற விவரத்தை ஷாஃப்ரூன் நிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"யுவன் தனது நண்பரின் தோழி ரம்ஜான் பீவியிடம் (அவர் எனக்கும், யுவனுக்கும் இன்று வரை ஒரு சகோதரி போல) தனக்குப் பெண் பார்க்கச் சொல்லியிருக்கிறார். நான் துபாய், மலேசியா என ரம்ஜான் பீவிக்கு ஆடை வடிவமைப்புச் செய்திருக்கிறேன். அவர் தான் எங்களை இணைத்தார். இந்தத் திருமண யோசனையை அவர்தான் முன்வைத்தார். எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

எதையும் நிரூபிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. என்னைத் திருமணம் செய்து கொள்ளத்தான் என் கணவர் மதம் மாறியதாக சிலர் கூறுவதால் அல்ல. என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் எனக்குக் கவலை இல்லை. இது எதுவுமே எனக்கு முக்கியமல்ல.

நம் நாட்டில் மற்ற மதத்துக்கு மாறுபவர்கள் அனைவருமே திருமணம் செய்து கொள்ளவோ, வேறு பொருள் சார் காரணங்களுக்காக தான் மாறுகிறார்கள் என மக்கள் நினைத்துக் கொள்கின்றனர். நம்பிக்கை இதையெல்லாம் கடந்தது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. நம்பிக்கையைத் திணிக்க முடியாது. அப்படி திணிக்கப்பட்டால் அது நம்பிக்கையே கிடையாது. கட்டாயப்படுத்தப்பட்ட அடக்குமுறை.

எங்கள் திருமணம் அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. சில அனுமானங்களும், குழப்பங்களும் இருந்தன. ஆனால் என் திருமணம் நிச்சயிக்கப்பட ஒரே காரணம், ரம்ஜான் பீவி யுவனைச் சந்திக்க வைத்தபோது என் அம்மா, பெரியப்பா மற்றும் பெரியம்மாவுக்கு அவரை ஒரு மனிதராக மிகவும் பிடித்தது. அதனால்தான் முடிவெடுக்கப்பட்டது.

எனவே இதைப் புரிந்து கொள்ளுங்கள்:

1. ஒருவர், ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறினால் அவர் இருக்கும். இருந்த இரண்டு நம்பிக்கைகளையுமே அவர் நம்பாதவர் என்று பொருள். மத மாற்றத்தில் அர்த்தமே இருக்காது. ஏனென்றால் ஒரு மதத்தின் கொள்கைகள் மற்றும் மறைகள் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே அந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும்

2. பணத்துக்காக, மற்ற பொருள் சார் விஷயங்களுக்காக ஒருவர் மதம் மாறினால் அவர் செல்வத்தை வழிபடுகிறார் என்று பொருள். பணம் தான் அவர் கடவுள்".

இவ்வாறு யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE