நிசர்கா புயலால் சேதமான சல்மான் கானின் பண்ணை வீடு

By ஐஏஎன்எஸ்

நிசர்கா புயலால் சல்மான் கானின் பண்ணை வீடு சேதம் அடைந்துள்ளது.

மும்பை நகரத்தைப் பாதிக்காமல் விட்ட நிசர்கா புயல் புறநகர் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு பகுதி பான்வெல், இங்குதான் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பண்ணை வீடு அமைந்துள்ளது.

ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்தே சல்மான் கான், அவரது சகோதரி அர்பிதா, அவரது குடும்பம், நடிகை ஜாக்குவலின் ஃபெர்னாண்ட்ஸ் உள்ளிட்ட சில நண்பர்கள், சல்மான் கானின் காதலி என்று சொல்லப்படும் லூலியா வண்டூர் ஆகியோர் இந்தப் பண்ணை வீட்டில்தான் தங்கியிருந்தனர். இந்த இடம் புயலால் சேதம் அடைந்துள்ளது.

இதுபற்றி லூலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'புயலுக்குப் பிறகு' என்று குறிப்பிட்டு சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பண்ணை வீட்டில் முறிந்துபோன மரங்களை இதில் பார்க்க முடிகிறது. இதோடு சூரிய வெளிச்சத்துடன் தெளிவான வானம் தெரியும் புகைப்படத்தையும் பகிர்ந்து, 'ஆனால் வாழ்க்கை தொடரும். நம்மைச் சரி செய்ய சூரியன் மீண்டும் தோன்றியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

புயலால் முறிந்து விழுந்துள்ள மரக்கிளையில் தேள் ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்றையும் லூலியா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்களில் சல்மான் கான் இல்லை என்றாலும் பின்னணியில் அவரது குரலைக் கேட்க முடிகிறது. முன்னதாக வெள்ளி அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சல்மான், லூலியா உள்ளிட்ட நண்பர்களுடன் தனது பண்ணை வீட்டைச் சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE