கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட நடிகர் ப்ரித்விராஜ், கட்டாயத் தனிமைக் காலத்துக்குப் பிறகு இல்லம் திரும்பி தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். தனது மனைவி சுப்ரியா மற்றும் மகள் அலங்ரிதாவுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை ப்ரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக 'ஆடுஜீவிதம்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக, ப்ரித்விராஜ் உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழு சில மாதங்களுக்கு முன்பு ஜோர்டான் நாட்டுக்குச் சென்றது. கரோனா நெருக்கடியால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் கடந்த இரண்டு மாதங்களாக அங்கேயே சிக்கியிருந்த படக்குழு, சில வாரங்களுக்கு முன் இந்தியா திரும்பியது. இந்தியா திரும்பிய அனைவரும், விதிமுறைகளின்படி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்தக் கட்டாயத் தனிமைக் காலம் முடிந்தே ப்ரித்விராஜ் வீடு திரும்பியுள்ளார். தான் பகிர்ந்த புகைப்படத்துடன் 'மீண்டும் இணைந்துவிட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார். சக நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் ப்ரித்விராஜின் இந்தப் புகைப்படப் பதிவுக்குக் கருத்துப் பதிவிட்டுள்ளனர்.
சமீபத்தில் தனது கோவிட்-19 பரிசோதனை முடிவுகளை ப்ரித்விராஜ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.