சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள 'மாநாடு' படக்குழுவினர் புதிய முயற்சிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் சென்னை படப்பிடிப்பு முடிந்து, ஹைதராபாத்தில் பெரிய ஷெட்யூல் ஒன்றை திட்டமிட்டுச் சென்றது.
அப்போது தான் கரோனா பரவல் தொடங்கியதால் உடனடியாகத் திரும்பிவிட்டது படக்குழு. தற்போது கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், முழுவீச்சில் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறது. இதனிடையே, 'மாநாடு' படத்தில் நிறைய நடிகர்கள் உள்ள காட்சிகள் அதிகமாகவுள்ளதால், கரோனா அச்சுறுத்தல் முடிந்தாலும் திட்டமிட்டப்படி காட்சிப்படுத்த முடியுமா என்ற கேள்வி படக்குழுவுக்கு எழுந்துள்ளது.
ஏனென்றால், சின்னத்திரை படப்பிடிப்புக்கே பல்வேறு நிபந்தனைகளுடன்தான் அனுமதியளித்தது தமிழக அரசு. இதனால் வெள்ளித்திரை படப்பிடிப்புக்கும் இதேபோன்று நிபந்தனைகளை அளித்தால் கண்டிப்பாக 'மாநாடு' படப்பிடிப்பு பாதிக்கப்படும். ஆகையால், 'மாநாடு' படத்துக்கு முன்னதாக ஒரு புதிய படத்தை திட்டமிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
» தமிழ் சினிமாவின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 விஜய் தான்: கேயார்
» 'சங்கமித்ரா' கதை சூறாவளி மாதிரி இருக்கும்: விஸ்வநாத் சுந்தரம் பகிர்வு
என்னவென்றால், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட சிலர் நடிக்க புதிய படமொன்றைத் தொடங்கவுள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார். இதில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், யாருக்கும் சம்பளம் கிடையாது. படத்தின் வியாபாரத்தில் சதவீத அடிப்படையில் சம்பளம் என்ற முறையில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர். இந்தப் படத்தின் கதைப்படி குறைவான நடிகர்களே தேவை என்பதால், கரோனா அச்சுறுத்தல் முடிந்தாலும் இதைக் காட்சிப்படுத்துவதற்குப் பிரச்சினையில்லை என்று கருதுகிறது படக்குழு.
விரைவில் இந்தப் பேச்சுவார்த்தை முடிந்து, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.