'சங்கமித்ரா' கதை சூறாவளி மாதிரி இருக்கும்: விஸ்வநாத் சுந்தரம் பகிர்வு

By செய்திப்பிரிவு

'சங்கமித்ரா' படத்தின் கதை சூறாவளி மாதிரி இருக்கும் என்று விஸ்வநாத் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'சங்கமித்ரா'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இதற்காக படக்குழுவினரை அழைத்துச் சென்றது, விளம்பரப்படுத்தியது என்று பல கோடிகளை செலவழித்தது தயாரிப்பு நிறுவனம்.

ஆனால், இந்தப் படம் தொடங்காமலேயே கிடப்பில் போடப்பட்டது. இதனால் தனது அடுத்த படத்தின் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார் சுந்தர்.சி. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகளுக்காகவே பல மாதங்கள் சுந்தர்.சி, பத்ரி, கலை இயக்குநர் சாபுசிரில், காட்சி மேம்பாட்டு கலைஞர் விஸ்வநாத் சுந்தரம் உள்ளிட்ட பலர் பணிபுரிந்துள்ளனர்.

தற்போது 'இந்து தமிழ் திசை' இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஸ்வநாத் சுந்தரம் அளித்த நேரலை பேட்டியில் 'சங்கமித்ரா' படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது:

"அந்தப் படம் முழுமையாக வடிவமைத்துவிட்டேன். அனைத்து அரண்மனைகள், கதாபாத்திரங்கள் என முடிந்துவிட்டது. அந்த புகைப்படங்களை எல்லாம் இப்போது வெளியிடத் தொடங்கினால், அது இன்னொரு வருடம் புகைப்படங்களாக போட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இருக்கிறது. நிறைய பணிபுரிந்த படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

ரொம்ப அற்புதமான கதை. சும்மா சூறாவளி மாதிரி இருக்கும். அந்தப் படத்தின் நிலைக் குறித்து தொடர்ச்சியாக கேட்டாலும் நன்றாக இருக்காது. ஆகையால் விட்டுவிட்டேன். சாபு சார் சொல்லி இயக்குநர் பத்ரி சார் வந்து கதை சொன்னார். அவர் கதையைச் சொன்ன விதமே என்னை ரொம்ப ஈர்த்தது. படையைத் திரட்டிக் கொண்டு வரும் காட்சி எல்லாம் அவ்வளவு அற்புதமான காட்சி. அது ஏன் இன்னும் தொடங்கவில்லை என தெரியவில்லை"

இவ்வாறு விஸ்வநாத் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE