விக்ரமை வைத்து படமொன்றை இயக்க நினைத்ததாக அனுராக் காஷ்யப் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகராக வலம் வரும் விக்ரம், முன்பாக டப்பிங் கலைஞராக பணிபுரிந்துள்ளார். பல பழைய படங்களில் இவருடைய டப்பிங் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான '2.0' படத்துக்குக் கூட அக்ஷய் குமார் கதாபாத்திரத்துக்கு இவரை வைத்து டப்பிங் செய்தார்கள். ஆனால், சரியாக பொருந்தவில்லை என்பதால் விட்டுவிட்டார்கள்.
இதனிடையே விக்ரமுடான நட்பு குறித்து அனுராக் காஷ்யப் பேட்டியொன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"1998-ம் ஆண்டு வெளியான 'சத்யா' திரைப்படத்தை தென்னிந்தியாவில் வெளியிட முயற்சித்த போது விக்ரமின் பரிச்சயம் கிடைத்தது. அதில சில கதாபாத்திரங்களின் டப்பிங்கில் விக்ரம் எங்களுக்கு உதவி செய்தார். அந்த சமயத்தில் தான் அவர் 'சேது' நடித்தார். அப்போது நான் அவரைச் சென்று சந்தித்தேன். அவரை வைத்து திரைப்படம் எடுக்கவேண்டும் என்று யோசித்தேன். ஆனால் சாத்தியப்படவில்லை"
இவ்வாறு அனுராக் காஷ்யப் பேசியுள்ளார்.
ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'சத்யா' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படமாகும். இந்தப் படத்தின் கதையை சவுரப் சுக்லா மற்றும் அனுராக் காஷ்யப் இருவரும் இணைந்து எழுதியிருந்தனர் என்பது நினைவுக் கூரத்தக்கது.