ஆன்லைன் வர்த்தக மோசடியைப் பின்புலமாகக் கொண்டு 'சக்ரா' திரைப்படம் உருவாகியுள்ளது.
'ஆக்ஷன்' படத்துக்கு இடையே, தனது தயாரிப்பில் உருவான 'சக்ரா' படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் விஷால். இந்தப் படத்தை எழிலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எம்.எஸ்.ஆனந்தன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தான், கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகில் அனைத்து பணிகளுமே முடங்கின.
தற்போது இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி கிடைத்திருப்பதால், அதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. இன்னும் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த கரோனா காலத்தில் 'சக்ரா' படக்குழுவினரோ டீஸரை தயார் செய்துள்ளனர். விரைவில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆன்லைன் வர்த்தக மோசடிகளைப் பின்னணியாகக் கொண்டு த்ரில்லர் பாணியில் 'சக்ரா' உருவாகியுள்ளது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்