தணிக்கை செய்யப்பட்ட சூரரைப் போற்று

By செய்திப்பிரிவு

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவுற்றுள்ளன

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பணிகளுமே முடிவுற்றது. கரோனா அச்சுறுத்தல் மட்டுமில்லை என்றால், இந்நேரத்துக்கு இந்தப் படம் வெளியாகி இருக்கும். கரோனா அச்சுறுத்தலால் இதன் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.

இதனிடையே, இந்தப் படத்தை தணிக்கைச் செய்துவிட்டது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தமிழில் தணிக்கைச் செய்யப்பட்ட முதல் படமாக 'சூரரைப் போற்று' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் டீஸர் மற்றும் 2 பாடல்கள் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்னும் இதரப் பாடல்கள் வெளியிடப்படவில்லை. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், 'சூரரைப் போற்று' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE