ஃபோர்ப்ஸின் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்கள் பட்டியலில் ஒரே இந்தியர்

உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 பிரபலங்கள் என்ற ஃபோர்ப்ஸின் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இடம்பெற்றுள்ளார். கடந்த வருடமும் அவர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அக்‌ஷய் குமாரை பாலிவுட்டின் அதிக சம்பளம் பெறும் நட்சத்திரம் என்று வர்ணித்திருக்கும் ஃபோர்ப்ஸ், இந்தியாவின் அதிக மனிதநேயமிக்க பிரபலங்களில் ஒருவர் என்றும் பாராட்டியுள்ளது. மேலும் நம்பிப் பணம் முதலீடு செய்யத் தகுந்த சினிமா நட்சத்திரம் என்றும், படத்துக்கு 100 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அக்‌ஷய் குமாரின் வருவாய் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட 366 கோடி ரூபாயை அக்‌ஷய் குமார் ஈட்டியதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாகக் கருதப்படும் வில் ஸ்மித் 69-வது இடத்தில் இடம்பெற்றிருக்க அக்‌ஷய்குமார் 52-வது இடத்தில் இருக்கிறார்.

"நான் ஒரு கோடி ரூபாயைச் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவ்வளவுதான். ஆனால் நான் ஒரு மனிதன். எனவே முதலில் ஒரு கோடி சம்பாதித்தவுடன், ஏன் 100 கோடி ரூபாயைச் சம்பாதிக்க முடியாது என்று யோசித்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அதன் பிறகு என்னைத் தடுக்க முடியவில்லை" என்று அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

கடந்த வருடம் 'கேசரி', 'மிஷன் மங்கள்', 'ஹவுஸ்ஃபுல் 4', 'குட் நியூஸ்' என நான்கு சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்திருந்தார் அக்‌ஷய் குமார். மேலும் அமேசான் ப்ரைமில் அக்‌ஷய் குமார் 'தி எண்ட்' என்கிற தொடரில் நடிக்கவிருக்கிறார். இதுவே அவரது வருவாய் அதிகமாக முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE