சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

By செய்திப்பிரிவு

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார் சமந்தா. தெலுங்கு, இந்தி என முன்னணி நாயகர்களின் கமர்ஷியல் படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார் பூஜா ஹெக்டே.

இன்று (மே 28) பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவில் சமந்தாவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதனுடன் "இவர் எனக்கு அழகாக தெரியவில்லை" என்று குறிப்பிட்டார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அடுத்த சில நிமிடங்களில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார் பூஜா ஹெக்டே.

அதில், "கடந்த ஒரு மணி நேரமாக எனது இன்ஸ்டாகிராம் கணக்கின் பாதுகாப்பு குறித்து கடுமையாக யோசித்து வருகிறேன். இந்த நேரத்தில் உடனடியாக உதவிய எனது தொழில்நுட்பக் குழுவுக்கு நன்றி. ஒரு வழியாக எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை என் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டேன்.

மேலும், கடந்த ஒரு மணி நேரத்தில் என் கணக்கிலிருந்து பகிரப்பட்ட, இயக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. நீங்கள் யாரும் உங்கள் தனிப்பட்ட விவரங்களைத் தரவில்லை என நம்புகிறேன். நன்றி" என்று தெரிவித்தார் பூஜா ஹெக்டே.

பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவில் சமந்தாவின் பதிவும் நீக்கப்பட்டு இருந்தது. உடனடியாக சமந்தாவின் ரசிகர்களோ எப்படி சில மணி நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, உடனடியாக சரியாகும் என்று பூஜா ஹெக்டேவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பிவருகிறார்கள். மேலும் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் #PoojaMustApologizeSamantha என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட்டாகி வருகிறது.

இது தொடர்பாக பலரும் ட்வீட்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் போது, சமந்தா தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்தார். கரோனா ஊரடங்கில் தனது புகைப்படங்கள் எதையுமே ட்விட்டர் தளத்தில் பகிராமல் இருந்த சமந்தா, இன்று மட்டும் பகிர்ந்திருப்பது சமந்தாவுக்கு பதிலடிக் கொடுக்கத்தான் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE