'டாக்டர்' அப்டேட் எப்போது என்ற ரசிகரின் கேள்விக்கு தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் பதிலளித்துள்ளது.
'ஹீரோ' படத்துக்குப் பிறகு 'கோலமாவு கோகிலா' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.
கரோனா ஊரடங்கினால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு முடிந்தவுடன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான 'டிக்கிலோனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (மே 27) மாலை வெளியிடப்பட்டது.
இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்ளோ 'டாக்டர்' வெளியீடு உள்ளிட்ட அப்டேட்கள் எப்போது என்று கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுக் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக கே.ஜே.ஆர் நிறுவனம் கூறியிருப்பதாவது:
"அப்டேட் கேட்குறது ஈஸி. கொடுக்கிறது தான் கஷ்டம். ஊரடங்கு முடிந்து, 'டாக்டர்' படத்தின் பணிகள் மற்றும் 'அயலான்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்க காத்திருக்கிறோம். லாக்டவுன் முடிந்ததும், அப்டேட்ஸ் அள்ளும் பாருங்க"
இவ்வாறு கே.ஜே.ஆர் தெரிவித்துள்ளது.
'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனும் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். அவர் தமிழில் நாயகியாக அறிமுகமாகும் முதல் படம் இது. இதில் வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.