விஷாலுக்கு நாயகியாகும் ப்ரியா பவானி சங்கர்

By செய்திப்பிரிவு

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயம் ரவி, ராஷி கண்ணா, பொன்வண்ணன், சம்பத் ராஜ், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் 'அடங்க மறு'. அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் கார்த்திக் தங்கவேல். கார்த்திக்காக கதையைத் தயார் செய்தார். ஆனால், கார்த்தியின் தேதிகள் இப்போதைக்கு இல்லை என்று தெரிந்தவுடன், அந்நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு முன் வேறொரு படத்தை இயக்க முடிவு செய்தார் கார்த்திக் தங்கவேல்.

அந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க முன்வந்தார். அவரிடம் விஷாலின் தேதிகள் இருந்ததால், கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் விஷால் என்ற கூட்டணியை பேசி முடிவு செய்தார். கரோனா ஊரடங்கில் தொலைபேசி வாயிலாகவே கதையைச் சொல்லி நடிகர்கள் ஒப்பந்தம் தொடங்கி நடைபெற்றுள்ளது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக நடிக்க ப்ரியா பவானி சங்கரிடம் பேசி முடிவு செய்துள்ளது படக்குழு. அவருக்கும் கதை பிடித்துவிடவே சம்மதம் தெரிவித்துள்ளார். கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE