கரோனா ஊரடங்கில் தணிக்கை செய்யப்பட்ட நிசப்தம்

கரோனா ஊரடங்கில் தணிக்கை செய்யப்பட்ட முதல் படமாக 'நிசப்தம்' அமைந்துள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம், வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்தக் கரோனா ஊரடங்கினால் இதன் வெளியீடு பாதிக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கு பாதிப்பினால், இந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. மேலும், இந்தப் படத்தின் பெயர் அமேசான் ப்ரைம் வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் இடம்பெற்றிருந்தது. டிஜிட்டல் வெளியீட்டுக்கு மறுப்பு தெரிவித்து படக்குழுவினர் பேட்டியளித்து வந்தனர்.

தற்போது தங்கள் படத்தைச் சுற்றி வரும் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, '' 'நிசப்தம்' படம் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. இதனால் படம் திரையரங்கில்தான் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. தணிக்கை அதிகாரிகள் இந்தப் படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்'' என்று இயக்குநர் ஹேமந்த் மதுகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா ஊரடங்கு சமயத்தில் தணிக்கை செய்யப்பட்ட முதல் படம் 'நிசப்தம்' என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE