கரோனா பயம் அவசியமில்லை; ஊரடங்கு தேவையில்லை: மன்சூர் அலிகான்

கரோனா பயம் அவசியமில்லை; ஊரடங்கு தேவையில்லை என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை உள்ளிட்ட எந்தவொரு படப்பிடிப்புமே தொடங்கப்படவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளதால், அந்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மேலும், சின்னத்திரை படப்பிடிப்புக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது. ஆனால், 50 பேருடன் படப்பிடிப்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு இன்னும் அனுமதியளிக்கவில்லை.

இதனிடையே நடிகர் மன்சூர் அலிகான், கரோனா அச்சுறுத்தல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தைப் பருவத்திலேயே எதிர்கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவுப் பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது.

கரோனாவைப் பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கரோனா ஒன்றுமே இல்லை என்பதுதான் என் கணிப்பு. நம் மூதாதையரின் வைத்தியமே கரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சளி, இருமல் போன்றவை வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே சளி காணாமல் போய்விடுகிறது. மேலும், தூதுவலை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது.

இப்படி சளி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கரோனாவையும், நம் உணவுப் பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும். ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரைப் பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே போட்டிருக்கக் கூடாது என்பது தான் என் கருத்து. இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும் கேள்விக்குறி ஆகியிருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் இருக்கிறது.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருக்கும் அரசு 20 நபர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அப்படியானால் மற்றவர்கள் என்ன செய்வார்கள். எனவே, இது குறித்து மூத்த கலைஞர்கள் ஒன்றிணைந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

திரைத்துறை மட்டும் இன்றி மேலும் பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவிட வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளைத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோயில்களையும் திறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE