கரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம்பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து வசதி முடங்கியுள்ளதால் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
‘சந்திரமுகி’, ஒஸ்தி', 'தேவி', 'அருந்ததி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சோனு சூட், மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்து அவர்களைத் தானே முன்னின்று வழியனுப்பியும் வைத்தார்.
உத்தரப் பிரதேசத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தார் சோனு சூட். புலம்பெயர் தொழிலாளர்கள் உதவி கோர இலவச தொலைபேசி எண்களை அறிவித்துள்ளார்.
சோனுவின் இந்தச் சேவையை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். திரையில் வில்லன்; நிஜத்தில் ஹீரோ என்று பலரும் மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.
» ஒரு சோதனை எலியைப் போல உணர்ந்தேன்: ரன்வீர் சிங்
» புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ இலவச தொலைபேசி எண்கள்: சோனு சூட் அறிவிப்பு
இந்நிலையில் இயக்குநர் சஞ்சய் குப்தா தனது ட்விட்டர் பக்கத்தில் சோனு சூட்டுடன் தான் வாட்ஸ் அப்பில் பேசிய உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் அவர் சோனுவிடம், ''ப்ரதர்...அக்ஷய் குமார் தனது அடுத்த படத்தில் சோனு சூட்டாக நடிக்கிறார். அதற்கான உரிமையை நான் வாங்கிக் கொள்ளட்டுமா?'' என்று கிண்டலாகக் கேட்டிருந்தார். சஞ்சயின் இந்தக் கேள்விக்கு சோனு சிரிக்கும் எமோஜியைப் பதிலாக அளித்தார்.
சஞ்சய் குப்தாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. அக்ஷய் குமார் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.