வறுமையால் உதவி கேட்கும் மகாபாரத் தொடர் நடிகர்

By செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ் கவுல், 300-க்கும் மேற்பட்ட பஞ்சாபி மொழி திரைப்படங்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் இந்திரன் கதாபாத்திரத்தில் இவர் நடித்தது இவரை நாடு முழுவதும் பிரபலமாக்கியது.

இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக சதீஷ் கவுலுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வீடு உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் விற்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். லூதியானாவில் ஒரு சிறிய வாடகை வீட்டில் சதீஷ் கவுல் தங்கியிருக்கிறார். மேலும், தனக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்களை வாங்குவதற்கு கூட பணம் இல்லாத சூழலில் அவர் வறுமையில் வாடி வருகிறார்.

இதுகுறித்து சதீஷ் கவுல் கூறும்போது, “திரைப்படவாய்ப்புகள் சரிவர கிடைக்காததால், 2011-ம் ஆண்டு மும்பையில் இருந்து பஞ்சாபுக்கு வந்துநடிப்புக் கல்லூரியை தொடங்கினேன். ஆனால் அதில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. இதனால் என் சொத்துகள் அனைத்தையும் இழந்துவிட்டேன். தற்போது மிகவும் வறுமையான சூழலில் வாழ்கிறேன். பஞ்சாப் மற்றும் இந்தி திரையுலகம் எனக்கு உதவி செய்ய வேண்டும். இயக்குநர்கள் எனக்கு வாய்ப்பளித்து உதவ வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE