ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகும் 'அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் நியூசிலாந்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜான் லேண்டாவ் வியாழக்கிழமை அன்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அவதாருக்கான அரங்குகள் தயாராக இருக்கிறது என்றும், அடுத்த வாரம் நியூசிலாந்து செல்வதில் அனைவரும் ஆர்வத்துடன் இருக்கிறோம் என்றும் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா நெருக்கடியால் நியூசிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணமாக 'அவதார்' பட வேலைகள் மார்ச் மாதம் முடங்கின. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடர்கிறது. 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி, 'அவதார் 2' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தாமதம் ஏற்பட்டாலும் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று கேமரூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதல் பாகத்தின் கதை முடிந்து 12 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் கதையாக 'அவதார் 2' அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் 'அவதார்' உலகின் கடல் வாழ் உயிர்ச் சூழல் குறித்து இந்தப் படம் பேசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
» 'க/பெ. ரணசிங்கம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» 'பொன்மகள் வந்தாள்' படத்தை ஓடிடி-ல் வெளியிடுவது ஏன்? - ஜோதிகா விளக்கம்
2009-ம் ஆண்டு வெளியான 'அவதார்' திரைப்படம், திரைப்பட வரலாற்றில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. அந்த சாதனையைக் கடந்த வருடம் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' முறியடித்தது நினைவுகூரத்தக்கது.