இறுதியானது 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' கூட்டணி

By செய்திப்பிரிவு

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' உருவாவது உறுதியாகியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் பாடல்கள், கதையமைப்பு, வசனங்கள் என அனைத்து தரப்பிலும் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பால், இதன் 2-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்காக உருவாக்கிய கதையிலிருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இந்தக் குறும்படம் நேற்றிரவு (மே 20) வெளியானது.

சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது இந்தக் குறும்படம். இதில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், எடிட்டர் ஆண்டனி என அனைவருமே பணிபுரிந்துள்ளனர். மேலும், இந்த குறும்படத்தை கெளதம் மேனனின் ஒன்றாக எண்டர்டையின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.

இது தொடர்பாக விசாரித்த போது, "'மாநாடு' படத்துக்குப் பிறகு 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' படத்துக்குத் தான் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது" என்று தெரிவித்தார்கள். இதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE